கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் புதுச்சேரியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் இன்று முதல் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தொடங்கியது. இதில் கட்டுமரம், நாட்டுப்படகளை தவிர அனைத்து படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடைகாலத்தையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைபடகுகளும், பைபர் படகுகளும் கரை திரும்பின. புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திகுப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாம் கடல் பகுதிகளிலும் மீன்பிடி படகுகள் அந்தந்த மீனவ கிரமங்களிலும் பெரிய விசைப்படகுகள் நள்ளிரவு முதல் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்கு செல்லாததால் இந்த நாட்களில் ஓய்வில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகு
களையும், வலைகளையும் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மேலும் மீன்பிடி தடைகாலம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் மஹே பிராந்தியத்தில் வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்படும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.



கருத்துகள்
கருத்துரையிடுக