புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது.
மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா நாட்டின் மிக முக்கியமான பதவி வகிக்கும் மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
பல்லாயிரம் கோடி போலி மருந்துகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதை காவல்துறையின் விசாரணை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தின் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட IFS அதிகாரி சத்தியமூர்த்தி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதோடு ஆளுநர் அவர்களையும் இந்த விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதில் தவறு இல்லை என நினைக்கிறோம்.
மேலும் இந்த வழக்கை CBI, NIA விசாரணை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் வைத்து வருகின்றனர் ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் CBI, NIA விசாரணை நடத்திய எந்த வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது என்ற கேள்வியை எமது அமைப்பு முன் வைக்கிறது. இதற்கு பதில் இந்த வழக்கு விசாரணையை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு போன்ற நேர்மை தவறாத நீதியரசர்கள் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மனித உரிமை ஆர்வலர்களை உட்கொண்ட கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறோம்.
மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி புதுச்சேரி மாநில சபாநாயகர் அவர்களுடன் எந்த நோக்கத்திற்காக மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களையும் சட்ட அமைச்சர் அவர்களையும் சந்தித்தார் என்ற உண்மை அறிக்கையை வெளியிட வேண்டும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள சத்தியமூர்த்தி அவர்களோடு ஆளுநருக்கு எத்தகைய உறவு இருந்தது என்பதனையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக