புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் கல்வித் துறையில் கௌரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பாலசேவிகா போன்ற பணியிடங்கள் அரசு பணியிடங்கள் ஆகும். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மேற்குரிய சுமார் 292 அரசு பணியிடங்கள் சட்டத்துக்கு விரோதமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சட்டரீதியாகவும் மனிதாபமான அடிப்படையிலையும் இவ்வாறு பணியில் உள்ள ஒப்பந்த ஆசிரியர் பெருமக்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய அரசு பல்வேறு ஓட்டை உடைசல் காரணங்களை எடுத்துக் கூறி அவர்களுக்கு நியாயம் வழங்குவதை தடுத்து வந்தது.
அரசுப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பு ஊழியர்கள் சம்பந்தமாக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வழக்கின் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் மேற்கூறிய பணியிடங்களில் பணிபுரியவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தடை இல்லை என தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த பல்லாண்டு காலமாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தாயுள்ளத்தோடு பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறக்கும் 2026 புத்தாண்டின் பரிசாக ஆசிரியர் பெருமக்களை பணி நிரந்தரம் என்ற அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூபாய் 5000 வழங்கும் உத்தரவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த புத்தாண்டின் பரிசாக மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எந்த அரசாக இருந்தாலும் தனது தேர்தலுக்காக அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டியது தார்மீக கடமையாகும். தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கட்சியின் தேர்தல் கால அறிவிப்புகளில் 25 சதவீதத்தில் கூட இதுவரை செயல்படுத்தவில்லை. உதாரணத்துக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வழங்குதல், ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்தல், அரசுத் துறையில் அனைத்து வேலைவாய்ப்புகளையும் நிரப்புதல், மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு சம்பந்தமாக ரசீது வழங்குதல்,துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பொய்யான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக எடுத்துக் கூறி மக்களை ஏமாற்றிய திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் உள்ளது.
தனது தேர்தல் அறிக்கையில் உள்ள மிக முக்கியமான எந்த பிரச்சனையும் செய்யாத திராவிட முன்னேற்ற கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி மீண்டும் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் ஒரு குழுவினை நியமித்திருப்பது கேலிக்கூத்தான ஒன்றாகும். கடந்த கால தேர்தல் அறிக்கையை செயல்படுத்த முடியாத திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மீண்டும் தேர்தல் அறிக்கை வெளியிடும் தார்மீக உரிமை கூட கிடையாது. தேர்தல் அறிக்கை வெளியிடும் தகுதியை இழந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் சரியான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். மக்களுக்காக நல்லாட்சி நடத்திய மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி தமிழகத்தில் நிச்சயமாக மலரும்.புதுச்சேரியிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக