புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி அரசியல்வாதிகளில் மனசாட்சியே இல்லாமல் பகீர் பொய் குற்றச்சாட்டுக்களை கூறுவதில் வல்லவர் முன்னாள் முதல்வர் திரு.நாராயணசாமி ஆவார். தற்போது தனது பொய் குற்றச்சாட்டுகள் மூலம் அவரையே பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் அவர்கள் வல்லவராக முன்னேறி வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்கள் அரசு ஊழியர்களால் (BLO) வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது. இதுபொன்ற விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்வதில் அரசியல் கட்சிகளின் சார்பில் புத் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் (BLA-1, BLA-2) கண்காணிக்கலாம். இப்பணியில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் விருப்பம் இருந்தால் வீடு வீடாக அரசு அதிகாரிகளுடன் செல்லலாம்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதியான லாஸ்பேட்டையில் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்யும் ஊழியர்களுடன் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த முகவர்கள் சென்றுள்ளனர். இது ஏதோ மிகப்பெரிய குற்றம் என நினைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் அவர்கள் மக்களை ஏமாற்றும் விதமாக தேர்தல் துறை மீது பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளார். புதுச்சேரியில் அதிகாரிகள் துணையோடு வாக்கு திருட்டு நடப்பதாகவும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என ஒரு பொய் அறிவுரையை வேறு சொல்லியுள்ளார்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டின் அடிப்படையில் வெற்றி பெற்ற திரு.வைத்திலிங்கம் அவர்கள் விண்ணப்ப படிவம் வழங்கும் போதே வாக்கு திருட்டு செய்கிறார்கள் என தனது முன் அனுபவத்தில் அடிப்படையில் கூறுவதாக தெரிகிறது.
வாக்காளர் சம்பந்தமாக விண்ணப்ப படிவம் வழங்கும் போதே வாக்கு திருட்டை நடத்த முடியுமா. விண்ணப்ப படிவங்கள் வழங்குவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் கண்காணிக்க தேர்தல் துறை முழுமையாக வாய்ப்பளித்துள்ள நிலையில் தேவையற்ற பொய் குற்றச்சாட்டுகளை எடுத்து கூறி மக்கள் மத்தியில் அரசியல் ஆதாயத்தை காங்கிரஸ் தலைவர் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
வாக்காளர் திருத்தம் சம்பந்தமாக விண்ணப்ப படிவங்கள் வழங்குவதற்கு முன்பே சிறுபான்மையினர் வாக்குகள் நீக்கப்பட இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை திமுகவும் காங்கிரசும் தெரிவித்திருந்தன. சிறுபான்மை மக்கள் ஒன்றும் அறியாத ஏமாளிகள் என்பது போல் அந்த மக்களுடைய வாக்குகளை இந்த இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் பாதுகாக்க வானத்தில் இருந்து இறங்கி வந்த தூதுவர்கள் போல் பொய் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
தற்போது தேர்தல் துறையின் மீது காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திரு. வைத்திலிங்கம் அவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேலையில் தோல்வி பயத்தில் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துகின்ற விதத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரசும் திமுகவும் முன்னெடுத்து செல்வது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். ஏதோ ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை திரு.வைத்திலிங்கம் அவர்கள் கூறியுள்ளார் என கடந்து செல்லாமல் தேர்தல் ஆணையம் இவர் கூறுவது பொய் என்றால் இவர் மீதும் இவர் சார்ந்துள்ள கட்சியின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை தொடர்ந்து இந்தியா கூட்டணியினர் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சீர்குலைக்கும் விததத்தில் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இப்படி பொய் குற்றச்சாட்டை கூறி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக