விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் தமிழ்வாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்மையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் கறவை மாடு வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டலாம் என்று பரிந்துரைத்துள்ளார். முதல்வரின் இத்தகைய அறிவிப்பு புதுச்சேரியின் கல்வி கட்டமைப்பு மீது ஒன்றிய பாஜக அரசு நடத்தும் தாக்குதல்களை மூடி மறைக்கும் வேலையாகும்.உயர்கல்வியில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நுழைவு தேர்வு கட்டாயம் என்ற நிலையை ஒன்றிய பாஜக அரசு திணித்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை என்பது மூன்று ,ஐந்து,எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு என்று தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை திணிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் இருந்து பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தலித் ,பழங்குடியின சமூகங்களை சார்ந்த மாணவர்களை நுழைய விடாமலும் நுழைந்தவர்களை வடிகட்ட துடிக்கும் பாஜகவின் சதி திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியுள்ளார்.
கல்வியின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசுவது புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஒன்றிய பாஜக அரசின் இந்த சதி திட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் கல்வி கற்றால் வேலைவாய்ப்பு பெற முடியாது வேண்டுமானால் மாடு மேய்த்து பிழைப்பு நடத்துங்கள் முதல்வர் ரங்கசாமி அவர்கள் பரிந்துரைப்பது சனாதன சிந்தனையே ஆகும்.புதுச்சேரி மாநிலத்தில் படித்து பட்டம் பெற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் இத்தகைய அவல நிலை ஏற்பட்டதற்கு புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும்,அதற்கு தலைமையேற்றுள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வேலை இல்லா திண்டாட்டத்தை கருத்தில் கொண்டு அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் மீது பழியை போடும் வேலையில் முதல்வர் இறங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.முதல்வரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு கல்வியின் மீதான சமூகத்தின் ஈடுபாட்டை மடைமாற்றி கல்வி அறிவற்ற, பகுத்தறிவற்ற, ஏற்றத்தாழ்வுடன் கூடிய பண்டைய சனாதன சமூகத்திற்கு புதுச்சேரி மக்களை பலவந்தமாக இழுத்து செல்லும் முயற்சியாகும்.பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த பின்னர் புதுவை மாநிலம் முழுவதும் ரெஸ்ட்ரோபார்கள், மதுபான தொழிற்சாலைகள் திறப்பதிலுமே கவனம் செலுத்துகிறார். புதுச்சேரி மக்களின் கல்வி வேலை வாய்ப்பு சுகாதாரம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி மாடு,மாடு வளர்ப்பு என்று சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் முதல்வர் ரங்கசாமி அவர்களை விசிக முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
முதல்வரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சை திரும்ப பெற வலியுறுத்தி ஜனநாயக சிந்தனை கொண்ட மாணவர் இளைஞர் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக