புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் வித்தியாசமாக இருந்தது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருப்பதற்காகவே புதுச்சேரியை விரும்பி வருகை தந்தனர். புதுச்சேரிக்கு என்று தனித்தன்மை இருந்தது. தற்போது, அதை சிதைக்கும் பொருட்டு முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து ஏழை மக்களுடைய வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூலித் தொழிலாளியாகவும், தனியாரிலும் வேலை செய்துக் கொண்டு பிரதான வாகனமாக டூவீலர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது அறிவித்துள்ள புத்தாண்டு பரிசான பெட்ரோல் விலை உயர்வால் அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சிந்தனை உடைய அரசு தொடர்ந்து அனைத்து தொழிற்சாலைகளையும் மூடியது. பெரிய நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக்கி சுமார் 50,000க்கு மேற்பட்டவர்கள் வெளி மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தனர். பிரதமர் மோடி அவர்கள் பெஸ்ட் புதுச்சேரி கனவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மோசமான புதுச்சேரியாக மாற்றிவிட்டார். இதற்கு வருகின்ற தேர்தல் ஒரு தீர்வாக அமையும்.
புத்தாண்டில் மக்கள் முன்னேற அரசு புதிய திட்டங்கள், வேலை வாய்ப்பு வழங்கும். ஆனால் அதற்கு எதிர்மாறாக, மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், புத்தாண்டு பரிசாக வாட் வரியை உயர்த்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திருப்பது புதுச்சேரி மக்கள் சார்பாக கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம். பெட்ரோல், டீசல் உயர்வை மறு பரிசினை செய்ய வேண்டும். மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். தொடர்ந்து இலவசத்தை மட்டுமே நம்பி அரசாங்க நடத்தும் ஒரே அரசு புதுவை அரசு. வாழ்வாதாரத்தை, கட்டமைப்பை, தொழில்துறையை முன்னேற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் மீது அக்கறையும் இல்லை. புதிய மாற்றத்திற்காக தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் அரசு புதுச்சேரி மாநிலத்தை சீரழித்தது. அதே வழியை பின்பற்றி வரிகளை ஏற்றி மக்களை வாட்டி வதைக்கும் அரசாக தற்போது புதுவை அரசை மாற்றிவிட்டார். புதுச்சேரியில் லட்சக்கணக்கான மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டு வாடகை, மின்சார கட்டணம், குப்பை வரி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் தற்பொழுது பெட்ரோல் வரியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் கூடுதலாக செலவழிக்க கூடிய நிலையை உருவாக்கி விட்டனர்.
மேலும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ஏற்றியிருப்பது, புதுச்சேரி மாநிலம் தனித்தன்மையை இழந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மீது, அரசு வரி என்ற பெயரில் பொருளாதார சுமையை ஏற்றி சிறிதளவு இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது. உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெட்ரோல் வரிக்குப் பதிலாக புதுச்சேரியில் மது கடைகளுக்கு கூடுதல் வரி விதிக்காமல், மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு வரி போட்டியிருப்பது, சர்வாதிகார போக்கை காட்டுகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது. இதற்காக தனித்தன்மை உண்டு. இங்கே இயற்கை வளங்கள் இல்லை. மக்கள் சொந்தமாக தொழில் தொடங்க எந்த விதமான மூலப்பொருளும் இல்லை. இதை உணராத அரசாங்கம் பிற மாநிலங்களை காரணம் காட்டி இனியும் ஏமாற்ற வேண்டாம். பிரதமர் அவர்கள் சொன்ன பெஸ்ட் புதுச்சேரியை அவருக்கு எதிராக முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு கொண்டு வருகிறார். புயல் நிவாரணமாக 5000 ரூபாய் அறிவித்துவிட்டு மீண்டும் வரி என்ற பெயரில் அவர்களிடமே வசூல் செய்வதை மக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக