புதுவை மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலம், இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டையில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 1,50,000 சதுரடி பரப்பளவு கொண்ட கொள்ளிமேடு மைதானம் கடந்த 50 ஆண்டுகளாக பலவிதமான பிரச்சனையுள்ள இடமாக இருந்து வருகிறது. இந்த கொள்ளிமேடு மைதானத்தை சமீபகாலமாக அரசியல் பிரமுகர்களின் துணையோடு மனைகளாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மேற்பார்வையிலும், பராமரிப்பிலும் இருந்து வருகிறது. இது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆளுனர் நேரிடையாக வந்து பார்வையிட்டு மிகவிரைவில் அரசுடையாக்கப்பட்டு, பெத்துச்செட்டிப்பேட்டை, சாந்திநகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், செல்லபெருமாள்பேட்டை மற்றும் ஆனந்தா நகரில் வசித்து வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்காக பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இது சம்பந்தமாக பல அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் தற்போது தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த ஒரு முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அரசாங்கமே நேரிடையாக தலையீட்டு 50 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மீறினால் பொதுமக்கள் திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். மேலும், அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய நில விற்பனையாளர் மூலம், முதல்வருக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ள ஒரு காவல் அதிகாரி பெத்துச்செட்டிப்பேட்டை ஸ்ரீசித்தி விநாயகர் ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கொள்ளிமேடு மைதானத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மற்றும் உரிமை மாற்றம் செய்து மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல் உள்ளது. அப்படி அதிகாரிகள் தவறு செய்யும் பட்சத்தில், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான சொத்தை பாதுகாக்க நீதிமன்ற சென்றதுபோல, பொதுமக்கள் ஆதரவுடன் நீதிமன்றம் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி தரவும் தயங்கமாட்டேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக