புதுச்சேரி நகரப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி திறக்கப்படும் தங்கும் விடுதிகளை தடை செய்ய வேண்டும் என சுயேச்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில்,
புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட, உருளையன்பேட்டை தொகுதியில் பல தெருக்களில் தீடீர்,தீடீர் என்று தங்கும் விடுதிகள் அதிகளவில் திறக்கபடுகிறது. இப்படிப்பட்ட தங்கும் விடுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி திறக்கப்படுவதால் அங்கு தங்கும் நபர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
அதேநேரத்தில் அக்கம்பக்கம் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படி தீடீர் என்று தோன்றும் தங்கும் விடுதிகளில் வாகனம் நிறுத்தும் வசதி ஏதுமில்லாததால் விடுதிகள் இருக்கும் தெருக்களிலேயே கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த தெரு பகுதியில் குடியிருப்பவர்களும், அந்தந்த தெரு வழியை பயன்படுத்தும் வாகனஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சண்டை, சச்சரவு நடைபெறுகிறது.
அதேபோல் இந்த விடுதிகளின் பயன்பாட்டுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் அதிகளவில் உபயோகபடுத்தப்படுவதால் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு கிடைக்ககூடிய மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரம் (Low Voltage) மற்றும் குடிநீர் பற்றாகுறை ஏற்படுகிறது. அதேபோல இப்படிப்பட்ட தங்கும் விடுதிகளில் இருந்து அதிகளவில் வெளியேறும் கழிவுநீரை முறையாக பாதாள சாக்கடையில் இணைக்காததால் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுவதுடன் அந்தந்த தெருக்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இப்படிப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகளவில் தொடங்கபடுவதால் அங்கு தங்கும் வெளி நபர்கள் குடி மற்றும் கஞ்சா போதையில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் பொதுமக்களுக்கும், அங்கு தங்கும் நபர்களுக்கும், விடுதி நடத்துவோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது.
மேலும் எந்த அடிப்படை வசதியும் இல்லமல் தொடங்கப்படும் தங்கும் விடுதிகளால் சுற்றுலா பயணிகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மற்றும் நகர பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகளை தடைசெய்ய வேண்டும். அதேநேரத்தில் புதியதாக தொடங்கவிருக்கும் தங்கும் விடுதிகளை தங்கள் துறையினர் ஆய்வு செய்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் போன்ற தேவையான அடிப்படை வசதிகள் அந்த தங்கும் விடுதிகளில் உள்ளதா என்பதை கண்டறிந்து அனுமதி அளிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் கண்டிப்பாக Trade License (வணிக உரிமம்) வழங்கக்கூடாது. எனவே தங்கும் விடுதிக்கான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக