சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் டைல்ஸ்,சிமெண்ட் கற்களால் கொடுரமாக அடித்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்கி.(35). ஓரிரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கான நடவடிக்கைகள் விக்கி மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியில் ஒருவரின் மரண துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சவ ஊர்வலத்தில் விக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் விக்கிக்கும் வாய் தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த டைல்ஸ் சிமெண்ட் உள்ளிட்ட பெரிய கற்களால் விக்கியை கொடுரமாக தாக்கியது. இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் தடுக்க முயன்ற போது அந்த கும்பல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூர்த்தியும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக விக்கி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை நடந்ததா என ஒதியஞ்சாலை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்ளனர்.
இதனிடையே,கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அதிமுக மாநில செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு சென்று விக்கியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், உடனடியாக கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினார்.
கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே காவல்துறை சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கடற்கரை வாலிபால் போட்டி நடத்தப்பட்டு அதன் பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் கொலை காரணமாக நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக