புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீய சக்திகள் அரசாளும் போது இயற்கை கோரதாண்டவம் ஆடுமாம். அந்த வகையில் தமிழக விடியா திமுகவின் ஆட்சி என்பது தமிழக அரசியலில் ஒரு இருண்ட ஆட்சியாக தற்போது மாறியுள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சுமார் 90 சதவீத மக்கள் தற்போது பெய்த மழையால் தங்களது உடமைகளை இழந்துள்ளனர். வீட்டிற்குள் 5 அடி 6 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதில் செப்டிக் டேங் மற்றும் வாய்க்கால் கழிவு நீர்கள் தேங்கியதால் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் மக்கள் சொல்லனா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் எந்தவித நிவாரண உதவிகளையும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு மக்களுக்கு செய்யவில்லை. இந்த ஆட்சி அமைய ஏன் வாக்களித்தோம் என்ற எண்ணத்தில் சென்னை மாநகர மக்கள் கடந்த சில நாட்களாக மனவெந்து போயுள்ளனர்.
சென்னை மாநகரில் உள்ள 90 சதவீத உட்புற, நகர்புற, சுற்றுப்புற பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மழை நீரால் தேங்கி போக்குவரத்து என்பது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. புதிது புதிதாக உருவாக்கப்பட்ட நகர் பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு மக்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த 2 ஆண்டுகாலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை திமுகவினர் ஆக்கிரமித்தனர். இதனால் மக்களின் நிலை என்பது கடந்த சில நாட்களாக எவ்வளவு வசதிபடைத்தவர்களாக இருந்தாலும் கண்ணீருடன் இருந்துள்ளனர். விடியா திமுக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூற கூட செல்லாமல் நன்கு ஜோடிக்கப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு செல்போனில் நிலவரங்களை கேட்டு வருகிறார். ஆனால் எங்களது கழக பொதுச்செயலாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிபார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு திடீரென ஜானோதயம் வந்து தமிழக முதுலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில இடங்களுக்கு சென்று வந்துள்ளார். முதலமைச்சர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கினற்னர். மக்கள் அல்லோலப்பட்டு இருக்கும் சூழலில் ஒரு 4 அல்லது 5 அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைத்து ஆய்வு செய்துள்ளார்.
ஆனால் வெட்கமே இல்லாமல் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞர் மாநாட்டு பணிகளை செய்ய அனுப்பி வைத்தது கேவளமான செயலாகும். திமுகவின் இளைஞர்களின் மாநாடு முக்கியமான ஒன்றா. பல 100 கோடி ரூபாய் செலவு செய்து சேலம் மாவட்டத்தையே அழிக்கக்கூடிய அளவில் திமுக நிர்வாகிகளை கொண்டு சேலம் பகுதியையே கெடுப்பதற்காக செலவு செய்து வருகின்றனர்.
சென்னையில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் இணைப்பே கொடுக்க முடியாத சூழுல் உள்ளது. மக்கள் மீது உண்மையில் திமுக முதுலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கரை இருந்தால் மாநாட்டு பணிகளில் உள்ள அமைச்சர்களை உடனடியாக சென்னை வரவைத்துவிட்டு அந்த மாநாட்டை ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் தொடர்ந்து சிறப்பு கூறு நிதி முறைகோடு தொடர்பாக அட்டவணை இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசு விழாக்களிலும் முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களிலும் தங்களின் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி சுமார் 458 கோடி அட்டவணை இன மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3-ல் ஒரு பங்கு சிறப்பு கூறு நிதியாக ஒதுக்கப்பட்டதில் 50 சதவீதம் கூட அதிகாரிகள் செலவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் அட்டவணை இனத்தை சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து சுயதொழில் செய்வதற்கு கடன் பெற 4000 விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருவருக்கு கூடு கடனுதவி வழங்கப்படவில்லை.
அரசு உயரதிகாரிகள் செய்யும் தவறால் படித்த பட்டதாரி அட்டவணை இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் மாணவர்கள் பெற்ற கல்வி கடன் அனைத்து ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார். ஆனால் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அது தொடர்பாக ஒரு அரசாணை கூட போடப்படவில்லை. முதலமைச்சரின் உத்தரவை அமல்படுத்த வேண்டியது தலைமை செயலாளரின் வேலை. ஆனால் அவை செய்யப்படுவதில்லை. இது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். முதலமைச்சர், அமைச்சர்கள் தலைமையில் ஒரு அதிகார மையமும், ஆளுநர் தலைமையில் ஒரு அதிகார மையமும், தலைமை செயலாளர் தலைமையில் ஒரு அதிகார மையம் என 3 அதிகார மையம் செயல்பட்டு வருகிறது.
சிறப்பு கூறு நிதியை செலவு செய்ய ஒரு சிறப்பு குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். அந்த குழு மாதம் ஒரு முறை கூடி அந்தந்த துறைகளில் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செயல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
துணைநிலை ஆளுநர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் தொகுதியில் மக்கள் பணிகளை செய்ய வேண்டும். என்னை ஏன் அரசு விழாவில் அழைக்கவில்லை என்று கேட்கக்கூடாது என கூறியுள்ளார். ஏம்பலம் தொகுதியை சேர்ந்த அட்டவணை இனத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் செய்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் நடைபெறும் விழாக்களில் என்னை அழைக்க வேண்டும். எனது கவனத்திற்கு கொண்டு வந்து விழா நடத்த வேண்டும் என கூறியுள்ளதாக சுற்ற்றிக்கை வந்துள்ளது. அப்படி அந்த சுற்றறிக்கையை தலைமை செயலாளர் தான் அனுப்பினார் என்றால் அவருக்கு அதிகாரம் கொடுத்த்து யார். அவரது செயல் தவறாக இருந்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அட்டணை இன மக்களுக்கு பல திட்டங்களையும், சலுகைகளையும் அரசு அறிவித்தாலும், அதற்கு தலைமை செயலாளரும், நிதி செயலாளரும் முட்டுகட்டையாக உள்ளனர். அவற்றை செயல்படுத்துவதில்லை.
சட்டத்திற்கு புறம்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காலாப்பட்டு சொலாரா கம்பெனி தீ விபத்து உயிரழப்பு சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் நியமித்த விசாரணைக்குழு சார்பில் என்ன அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக