சுற்றுலா பயணிகளின் வருகைக்காக, புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை வீட்டில் முடக்குவது நியாயம்தானா? அதிமுக குற்றச்சாட்டு.!
புதுச்சேரி அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் எந்த கனிமவளமும் இல்லை. மாநிலத்தின் வருவாய் பெருமளவு சுற்றுலாவை நம்பியே உள்ளது. சுற்றுலா வருமானத்தை தவிர்த்து புதுச்சேரி மாநில வருவாயை பெருக்க தொழிற்சாலைகள், சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை திறக்க எந்த அடிப்படை பணிகளையும் செய்யவில்லை.கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் வெற்று விளம்பர அரசியல் செய்து வருகிறார். இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரவேண்டும், அதன்மூலம் மாநிலத்தின் வருவாய் பெருக வேண்டும். இத்துடன் மற்ற துறைகளிலும் அரசு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. இதற்காக முதலமைச்சரும், அமைச்சர்களும், அரசுத்துறை அதிகாரிகளும் இதுவரை மேற்கொண்டுள்ள அடிப்படை நடவடிக்கைகள் என்ன? எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கும்போதே, தற்போது ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு என்ன வசதிகளை புதுச்சேரி அரசு செய்து தந்துள்ளது? போக்குவரத்து நெரிசலை சரி செய்துள்ளதா? புதுச்சேரி சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதா? முக்கிய இடங்களில் பொது கழிப்பறை வசதி செய்துள்ளதா? வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப் பட்டுள்ளதா? வார இறுதிநாட்களில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளார்களா? சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வழிகாட்டுதல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா? நெரிசலை சீர்செய்ய நகர பகுதியில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதா? நெரிசல் மிகுந்த சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதா? வாகனங்களை முறையாக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதா? கனரக வாகனங்கள் பகல்நேரத்தில் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதா? புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் கண்காணிக்கப்படுகிறதா? விடுதிகளின் கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளதா? வாடகை இருசக்கர வாகன நிலையங்கள் கண்காணிக்கப்படுகிறதா? சுற்றுலா பயணிகளுக்கு ஓட்டல்களில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதுதானா? இதை உணவு கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்கிறதா? பயணிகளின் உடல்நலன், உடைமைகளுக்கு தகுந்த பாதுகாப்பை புதுச்சேரி அரசு உறுதி செய்துள்ளதா?
இதுபோல புதுச்சேரிக்கு வரும் பயணிகளின் அடிப்படை வசதிகள், தேவைகள் எதையும் நிறைவேற்றாமல், சுற்றுலா வருவதற்கு அரசு அழைப்பு விடுக்கிறது. அரசின் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் வார இறுதியில் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். திருமணம், மஞ்சள்நீர் போன்ற சுபநிகழ்ச்சி களில் பங்கேற்க செல்வதற்கு கூட தயங்குகின்றனர். இதே நிலை நீடித்தால், கோவாவிலிருந்து பூர்வகுடி மக்கள் புதிய கோவாவை உருவாக்கி சென்றதுபோல, புதுச்சேரி நகரை விட்டு விலகி, புதிய புதுச்சேரிக்கு மண்ணின் மைந்தர்கள் இடம்பெயரும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி மண்ணின் மைந்தர்களின் ஓட்டுகளை வாங்கி அரியணையில் வீற்றிருப்போர், பதவிக்கு வந்தவுடன் அவர்களின் உரிமைகளை காக்க தவறிவிட்டனர்.ரெஸ்டோபார் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை சுற்றுலா என்ற பெயரில் சுய லாப நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். இவர்களின் போலி அரசியல் நாடகத்தை புதுச்சேரி மக்கள் கண்டு வருகின்றனர். இதற்கு தக்க நேரத்தில், தக்க பாடத்தை புதுச்சேரி மண்ணின் மைந்தவர்கள் புகட்டுவார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக