புதுச்சேரி மாநிலம் அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத விதத்தில் கியாஸ் மானியம், அரசின் மூலம் உதவி தொகைகள் பெறாத குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 டெபாசிட் தொகை என 3 முத்தான திட்டங்களை முதல்வர் அறிவித்து, திட்டத்தின் பயன் மக்களுக்கு சென்றடைய தற்போது அரசாணை வெளியிட மாண்புமிகு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டங்கள் உடனடியாக செயல் வடிவம் பெற்றதற்கு அதிமுக சார்பில் பாராட்டுக்களை மாண்புமிகு முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
கியாஸ் மானிம் சம்பந்தமாக பட்ஜெட்டில் மாண்புமிகு முதல்வர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மானியம் உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.126 கோடி நிதி தேவைப்படும். தற்போது தலைமை செயலாளர் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 வழங்காமல் சுமார் 1,65,500 சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் ரூ.300 வழங்க அனுமதி அளித்தும், சுமார் 1,87,500 மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு மாதம் ரூ.150 மானியம் என அனுமதி அளித்துள்ளது தவறான ஒன்றாகும்.
இது மக்களிடையே அரசின் மீது அவ நம்பிக்கையையும், விரக்தியையும் ஏற்பட்டுள்ளது. மஞ்சள் அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.300 கியாஸ் மானியம் அளித்தால் அரசுக்கு கூடுதலாக மாதம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.32 கோடி தான் செலவாகும். இந்த ரூ.32 கோடி என்பது அரசுக்கு பெரிய விஷயம் அல்ல. இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மாண்புமிகு முதல்வரும், துணைநிலை ஆளுநரும் அனைத்து குடும்பத்தினருக்கும் கியாஸ் மானியம் ரூ.300 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உயரிய திட்டத்திற்கு எதிராக உள்ள எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் வெகுஜன மக்கள் விரோதிகள் மட்டுமல்லாமல், அரசுக்கு திட்டமிட்டு அவப்பெயரை தேடித்தரும் அதிகாரிகள் என முடிவு செய்து மாநிலத்தில் இருந்து மாற்றம் செய்திடல் வேண்டும்.
ஒரு காலத்தில் உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக இருந்த நிலை மாறி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் முதல்வராக இருப்பதை சகித்துகொள்ள முடியாமல் முன்னாள் முதல்வர் திரு.வைத்திலிங்கம் தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய நிதி அமைச்சரிடம் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதியும், பல்வேறு புதிய திட்டங்களையும் எடுத்துரைத்த மாண்புமிகு முதல்வரை திரு. வைத்திலிங்கம் குறை கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ள திரு. வைத்திலிங்கம் மாநில மக்களின் நலன் கருதி ஏன் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மாநில உரிமைகள் குறித்து கடிதம் கொடுக்கவில்லை. மத்திய நிதி அமைச்சரை சந்திக்காதவருக்கு முதல்வரை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.
மாண்புமிகு முதல்வர் ஏசி காரில் செல்கிறார். வீடு போல பெரியதாக உள்ளது. கண்ணாடியை கூட இறக்காமல் உள்ளார் என வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
இந்தியாவிலேயே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எங்கள் எடப்பாடியாருக்கு அடுத்தபடி எளிமையான முதல்வர் என பெயர் பெற்றவர் திரு. ரங்கசாமி. அவர் ஏசி கார் வைத்திருக்க கூடாதா? எந்த மாநிலத்திலும் இல்லாத விதத்தில் சட்டசபையில் பாராளுமன்ற உறுப்பினர் உங்களுக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்து கொடுத்தவர் புதுச்சேரி முதல்வர். இந்த அடிப்படையில் உங்கள் ரூமுக்கு எத்தனை ஏசி, உங்கள் உதவியாளர் அறைக்கு எத்தனை ஏசி உள்ளது. உங்களை பார்க்க வரும் பார்வையாளர் அறையில் எத்தனை ஏசிகள் உள்ளது என எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வாகனம் ஏசி இல்லாத பழைய அம்பாசிட்டரா பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் முதல்வராக இருந்த போது உங்கள் உபயோகத்திற்கு எத்தனை அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு முன்னாள் முதல்வர்கள் இன்னாள் முதல்வரை பற்றி பேசும் போது தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். முதல்வர் பயன்படுத்தும் பொருட்களை பற்றி பேசும் போது ஆண்ட பரம்பரையில் இருந்து வந்த திரு. வைத்திலிங்கம் போன்ற முன்னாள் முதல்வருக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக