புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி அரசும், முதலமைச்சரும் அறிவிக்கும் திட்டங்கள் எதுவும் காலத்தோடு மக்களை சென்றடைவது கிடையாது. அரசின் நலத்திட்டங்கள் எப்போது கிடைக்கும்? என மக்கள் காத்திருந்து, காத்திருந்து காலம்தான் உருண்டோடுகிறது. பெண்களுக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு லேப்டாப், இளநிலை, மேல்நிலை எழுத்தர் தேர்வு உட்பட முதலமைச்சரின் எந்த அறிவிப்பும் அவர் கூறியபடி காலத்தோடு நடைமுறைக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. 3 தொகுதி மக்களை தவிர பிற தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கு படும் துயரம் சொல்லி மாளாது.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் மீனவர்களின் தனிநபர் விபரம், குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசின் எந்த துறையிலும் இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது கிடையாது. மீன்களை பிடிக்கிறாயா? மீன்களை விற்கிறாயா? எந்தெந்த தெருக்களில் விற்கிறாய்? குடும்பத்தில் எத்தனை பேர்? அவர்கள் படித்துள்ளார்களா? மீன்பிடிக்கிறார்களா? வேறு வேலைசெய்கிறார்களா? எந்த மாவட்டத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்களின் புகைப்படம் எங்கே? என கொடும் குற்றவாளிகள் போலவும், அரசின் நலத்திட்டங்களை
பெறுவதற்காக, போலியான தகவல்களை அளித்து மாபெரும் துரோகம் இழைப்பவர்கள் போலவும் மீனவ சமுதாய மக்களை இந்த என்ஆர்.காங்கிரஸ் அரசு கொச்சைப்படுத்துகிறது.
படிவத்தின் இறுதி உறுதிமொழியிலும், தவறான தகவல்களை தெரிவித்தால், தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு தொடர சம்மதமும் கோரப்பட்டுள்ளது. இதற்குமேல் மீனவ சமுதாய மக்களை புதுச்சேரியை ஆளும் அரசும், முதலமைச்சரும் இழிவுபடுத்த முடியாது. மீனவ சமுதாய மக்களுக்கு இனி எந்த சலுகையும் கிடையாது? என்பதை இந்த படிவம் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் அரசு வெளிப்படுத்துகிறதா?
முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு, தெற்கு உட்பட புதுச்சேரி மாநிலத்தில் வாழும் 18 மீனவ கிராம பஞ்சாயத்தில் வாழும் பெரும்பாலான பாமர, படிப்பறிவற்ற மீனவ சமுதாய மக்களை என்ஆர்.காங்கிரஸ் அரசு மறைமுக வஞ்சிக்க நினைக்கிறதா? மீனவ சமுதாய மக்களை இழிவுபடுத்துவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தேர்தலுக்கு தேர்தல் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மீனவ சமுதாய மக்களின் ஓட்டுகளை மட்டும் வேட்டையாடும் போலி கபடநாடகம் இனியும் எடுபடாது. மீன்வளத்துறை வழங்கி வரும் இந்த படிவத்தை உடனடியாக இந்த அரசு திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக