அரசின் சாதனைகள் என்பது அந்த அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை குறிப்பிடலாம். அரசின் வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனைகளாகாது. புதுவை அரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டவை வெற்று அறிவிப்புகளே தவிர சாதனைகள் அல்ல.
திட்டமிட்ட வளர்ச்சி என்பதே மாநிலத்தின் எழுச்சியாகும். அந்த வகையில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், புதுமை பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மாணவிகளுக்கு மாதம் ரூ 1000, இளைஞர்களுக்கு 4 லட்சம் வேலை, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் என ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடி மக்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காக்கின்ற திட்டங்களை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த அரசும் செய்திடாத சாதனைகளைச் செய்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பதை திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் எங்கள் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈராண்டுச் சாதனையாக பட்டியலிட்டுள்ளார். அதனை அனைவரும் வரவேற்கின்றனர்.
அதைவிடுத்து நிதி ஆதாரம் ஏதுமில்லாமல் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளை தமது அரசின் ஈராண்டு சாதனையாக புதுச்சேரி அரசு வௌியிட்டிருப்பது அரசின் செயலற்ற தன்மைக்கே சாட்சியாக உள்ளது. நிதி ஒதுக்கீடே இல்லாத திட்டங்களை எல்லாம் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.
மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என முதல் அமைச்சர் அறிவித்தார். அதற்கு எங்கே நிதி.? வேலை வாய்ப்புக்கு தொழில்நுட்ப பூங்கா எங்கே.? காணவில்லை. காங்கிரஸ் – திமுக ஆட்சியில் வேலையிழந்தவர்களுக்கு வேலை என்றார். எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்.?
உலக தமிழ் மாநாடு எப்போது? தமிழ் மொழிக்கான மொழியியல் பண்பாட்டு நிறுவனம் இன்று மூடுவிழா கண்டுள்ளது. ஏழை மகளிருக்கு அறிவித்த மாத தொகை முதல் மாதம் வழங்கியதோடு காலாவதியானது. புதிய சட்டமன்றம், மேம்பாலம் எங்கே.? அரசின் பழைய கடன் தள்ளுபடியானதா.? நிதிக்குழுவில் புதுவை அரசு இணைக்கப்பட்டதா.? ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடருமா.? 10 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதா.? கூட்டுறவு நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டதா.? எதையும் இந்த அரசு செய்யவில்லை.
ஆனால் உண்மையான சாதனைகளை பட்டியலில் சேர்க்காமல் இந்த அரசு மறந்துவிட்டது. அதை நினைவு படுத்துகிறோம். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு என்று தனி மது பார், இளைஞர்களும், மாணவர்களும் போதையில் மூழ்கியிருக்க புதுச்சேரியில் கஞ்சா விற்பனை, புதிதாக 6 மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி, லாபத்தில் இயங்கிய மின்துறையை தனியாருக்கு விற்பனை, காரைக்கால் துறைமுகம் அதானிக்கு தாரைவார்த்தல், கூட்டுறவு சர்க்கரை நூற்பாலை தனியாருக்கு ஏலம், மாணவர்களுக்கு உப்பு சப்பு இல்லாத அட்சபாத்திரா மதிய உணவு, 100 நாள் வேலைத்திட்டம் 5 நாள் வேலையாக சுருங்கியது, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் சாப்பாடு இல்லாத அவல நிலை, சிறப்புக்கூறு நிதி ரூ. 166 கோடி செலவு செய்யாமை, இவற்றை எல்லாம் சாதனை பட்டியலில் சேர்க்காதது ஏன்.?
புதுச்சேரி மக்கள் என்றைக்கும் விழிப்பாணவர்கள். அவர்களை ஏமாற்றுவதை விடுத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தும் போது அதனை நாங்கள் வரவேற்க தயங்க மாட்டோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக