புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரியின் அண்டை மாநில பகுதியான எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 15 மீனவர்கள் பலியாகியுள்ளனர். புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாட்டில் விசாரிக்கின்றனர், புதுச்சேரியில் கண்காணிக்கின்றனர், முழு தகவல்கள் கிடைத்தவுடன் சொல்கிறேன், புதுச்சேரி கலால் துறை ரூ.1,330 கோடி வருவாய் ஈட்டித்தந்துள்ளது என மிகுந்த அலட்சியத்தோடும், சர்வாதிகார போக்கோடும் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் தன் மீது எந்தவித பழியும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பலி ஆடாக கலால்துறை துணை ஆணையரை இடமாற்றம் செய்துள்ளார்.
இப்போது கள்ளச்சாராயம் மட்டுமல்ல, விஷத்தன்மை கொண்ட மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் என்ற உயிரை கொல்லும் விஷ சாராய கடத்தல் கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது, புதுச்சேரியிலிருந்து பல ஊர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த மெத்தில் ஆல்கஹால்தான் 15 பேர் உயிரை குடித்துள்ளது.
இரவு நேர கவர்ச்சி நடன பார்களால் விபரீதம் ஏற்படும் என எச்சரித்தோம், இதை மீறியதால் அப்பாவி பொறியியல் பட்டதாரி இளைஞர் பலியானார். இரவில் பெண்கள் நடுரோட்டில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. இப்போது புதுச்சேரியிலிருந்து சென்ற மெத்தில் ஆல்கஹால் கலந்த விஷ சாராயத்தை குடித்து 15 மீனவர்கள் இறந்துள்ளனர். இதன் எதிரொலியாகத்தான் கலால்துறை இணை ஆணையர் இடமாற்றம் செ ய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் தனது தவறான மதுபான கொள்கைகளால், தன்னுடைய கஜானாவுக்கு நிதி கிடைக்கிறது என்பதற்காக அப்பாவி உயிர்களை பலியிடுவது மிகப்பெரிய பாவம் என்பதை உணராமல் செயல்படுகிறார்.
முதியோருக்கு உதவி செய்கிறோம், ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்கிறோம், ஆன்மிக கடவுளுக்கு பட்டாலும், பொன்னாலும் அலங்காரம் செய்கிறோம், நமக்கு என்ன பாவம்? எல்லாத்தையும் சாமி பார்த்துக்கொள்வார் என்ற மமதையோடு வாழும் காமராசர் செயல்படுவது ஆணவத்தின் உச்சகட்டம். தடையில்லாத தாராளமய மதுபான கொள்கையாலும், நிர்வாக திறமை இன்மையாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வேதனைக்கும், வயிற்றெரிச்சலுக்கும், முன்னால் எந்த பரிகாரமும் எடுபடாது, எந்த பாவமும் குறைந்துவிடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக