முதல்வர் ரங்கசாமியால் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் செயல்பாட்டுக்கு வராத வளர் கலைக்கூடம்.!
புதுச்சேரி ஓவியர்களின் பல ஆண்டு கோரிக்கையான வளர் கலைக்கூடம் முதல்வர் ரங்கசாமியால் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் செயல்பாட்டுக்கு வராத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் கலை பண்பாட்டு துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில ஓவியர்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் புகழ்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியர்கள் உள்ளனர். தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த கலைக்கூடம் அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வந்த நிலையில், கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி நகரப்பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் அருகே வளர் கலைக்கூடம் அமைக்கப்பட்டு அதனை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம்,துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவையொட்டி, முதல் கண்காட்சியாக, மறைந்த புதுவை மாநில ஓவியர்களை கௌரவிக்கும் வகையில், சுதந்திரத்திற்கு முன் வரையப்பட்ட அவர்களது ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து கலைக்கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கலை பண்பாட்டு துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த ஒரு வருடமாக ஒரே ஓவிய கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தனியாக மின் இணைப்பு கொடுக்கப்படாததால், அருங்காட்சியகத்தில் இருந்து மின் இணைப்பு பெறப்பட்டு வெறும் மின் விளக்குகள் மட்டுமே எரிகிறது.மேலும் ஏசி இயந்திரம் பொருத்தப்பட்டும் பயன்படுத்த முடியாது சூழல் உள்ளது.
இதனையடுத்து ஓவியர்கள், தொடர்ந்து துறை அமைச்சர் சந்தி பிரியங்கா மற்றும் துறை இயக்குனரை சந்தித்து வளர் கலைக்கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஓவியர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களது படைப்புகளை கண்காட்சிக்கு வைக்க ஆவலாக உள்ள நிலையில்,விரைந்து வளர் கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் துறை இயக்குனர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவியர்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக