புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் (11-03-2023) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,
புதுச்சேரி மாநிலத்திற்கு நியாயமான கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனையில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக தெரிகிறது. மாநில அந்தஸ்து தொடர்பாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாஜக தலைவர் ஒரு முரண்பாடான கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் புதுச்சேரியில இருந்து பிரிக்கப்படும் என்ற தவறான கருத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த தவறான கருத்திற்கு திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியை சேர்ந்த சட்ட்டமன்ற உறுப்பினர்களும் அது தொடர்பாக சரியான விளக்கத்தை கூறவில்லை. யூனியன் பிதேசமான புதுச்சேரி மாநிலத்தை இன்று வரை டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஆட்சி செய்ய கூடிய இந்த சூழ்நிலையில் 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற்றால் ஏன் நம்மால் நிர்வாகம் செய்ய முடியாது.
மாநில அந்தஸ்து சம்பந்தமாக ஒரு உறுதியான நிலைபாட்டை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏகமானதாக சட்டமன்ற உறுப்பினர்கள் துணையோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதுவரை 13 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்படி சபாநாயகர் மூலம் அனுப்பப்பட்ட அனைத்து தீர்மானங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து பெற கூடிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி அதனை துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அவர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் ஒரு உறுதியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கொசுத்தொல்லையால் புதுச்சேரியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் டெங்குவால் 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று வைரசில் இருந்து பாதிக்கப்படும் மக்களுக்கு புதுச்சேரி மருத்தவமனையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் முன்னெச்சரிக்கையாக ஏற்படுத்தப்படாததால் அதிகப்படியான நோயாளிகள் தரையிலும் ஒரு படுக்கையில் 3 நோயாளிகள் படுக்க கூடிய ஒரு தவறான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதில் தசுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணிநேரம் இயங்க கூடிய வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளையாவது ஏற்படுத்தி தர வேண்டும். புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொசுத்தொல்லையை அழிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ வல்லுநர்களை கொண்டு சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும். செயல்படாமல் உள்ள அரசு கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு முகாம்களை அமைக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துணையோடு நில ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருகிறது. திமுக மாநில நிர்வாகிகளால் இது தொடர்ந்து அறங்கேறி வருகிறது. இதில் பெறப்படும் ஒருசில புகாரின் பேரில் அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
காமராஜர் சட்டமன்ற தொகுதியில் கிருஷ்ணாநகரில் உள்ள வழக்கறிஞரின் நிலத்தை திமுக மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன் ஆக்கிரமித்தார். இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து அரசு நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரியில் தொடர்ந்து நில அபகரிப்பில் ஈடுபடும் திமுகவினர் மீது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மாநில அமைப்பாளர் தடையா உள்ளாரா? இல்லை இவர்களுக்கு துணைபோகிறாரா என்று தெரிவிக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைபாட்டை துணைநிலை ஆளுநர் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதே போல் மாநில பாஜகவின் நிலைபாடு என்ன என்பதையும் பாஜக தெரிவிக்க வேண்டும்.
எங்களின் நிலைபாடு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக தேவை.
இவ்வாறு பேசினார்.பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்ச்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக