புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை. மக்கள் பிரதிநிதியாக நினைத்ததை செய்ய முடியாமல், மாநில அந்தஸ்து கிடைக்காமல், மன உளைச்சலில் உள்ளேன் என முதலமைச்சர் மேடைக்கு மேடை கபடநாடகம் ஆடி வருகிறார். முதலமைச்சர் முதலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான உரிமையை வழங்குவாரா ?
ஏனாம் பிராந்தியத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் உள்ளார். அந்த பிராந்தியத்தில் போட்டியிட்டு முதலமைச்சர் தோல்வியை தழுவினார். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடத்தில் இல்லை. இதனால் முதலமைச்சர் சர்வாதிகார நோக்கோடு, முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார். முதலமைச்சரால் வழங்கப்பட்ட பதவியை வைத்துக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எல்லாவிதத்திலும் முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுத்து வருகிறார்.
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக புதுச்சேரி அரசு சார்பில் எத்தனை முறை டெல்லி சென்றார் ? என்ன திட்டங்களை கொண்டுவந்தார் ? எவ்வளவு நிதியை பெற்றுத்தந்தார் ? முதலமைச்சர் அளித்த பதவி புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பெற செய்ய வழங்கப்பட்டது அல்ல, சுயேச்சை எம்.எல்.ஏ.வின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டி புதைப்பதற்குத்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் உதவித்தொகை ஆணையை மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரே பயனாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. ஆனால் ஏனாம் பிராந்தியத்தில் முதலமைச்சர் தூண்டுதலால் மண்டல நிர்வாக அதிகாரி, உதவித்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆணை வழங்க வரும்படி முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். ஒரே மேடையில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டே, முன்னாள் அமைச்சர் மூலம் பயனாளிகளுக்கு ஆணையை வழங்க வைத்துள்ளார். இதை தன்மானம் உள்ள எவரும் தட்டிக்கேட்பது நியாயமான ஒன்று.
சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார். இந்த காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டாரா ? இதே இடத்தில் இன்னாள் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சராக ஆகும்போது ஏற்றுக்கொள்வாரா ?
ஹிட்லர் போன்ற முதலமைச்சரின் சர்வாதிகார செயல்பாடை தட்டிக்கேட்காமல், கட்சி பாகுபாடின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மவுனம் காப்பது உங்கள் உரிமையை மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமையையும் பறிக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறேன். புதுச்சேரியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை புதுச்சேரி மாநில மக்கள், பாரதீயஜனதா கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது.
நாகரீகமற்ற இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை மேதகு துணை நிலை ஆளுநர் தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மேதகு துணை நிலை ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி, புதுச்சேரியில் உள்ள மற்ற தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினரை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாரிய தலைவர் பதவிகளை வாரி வழங்கலாம். புதுச்சேரி ஹிட்லரின் எண்ணத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு தொகுதியிலும் கோஷ்டிபூசல்களை உருவாக்கலாம். புதுச்சேரியின் வரலாறு, மாண்புகளை சீர்குலைக்க அடித்தளம் அமைக்கலாம்.
இந்த குரூர எண்ணம் கொண்ட அரசியல்போக்கு, புதுச்சேரி மாநிலத்திற்கு உகந்தது அல்ல. இதேநிலை இன்று மமதையோடு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வரும்காலத்தில் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக