சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பேசியதாவது: –
கவனஈர்ப்புத் தீர்மானம்
2005–ஆம் ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் பணியாளர்களுக்கான ஊதியம் ஒன்றிய அரசு 75 சதவீதம் எனவும், மாநில அரசு 25 சதவீத அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஊரகத்திலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 100 நாட்கள் வேலை வாய்ப்பு தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு, நாடு முழுவதும் சுமார் 10 கோடிக்கு மேல் பணியாளர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 283 ஊதியமாக வழங்கப்படுகிறது. தற்போது ஏப்ரல் முதல் ரூ. 294 என்று உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் அளித்துள்ள உணவு உரிமையின் ஒரு அங்கமாக, பட்டினிச்சாவு நிகழா வண்ணம் இத்திட்டம் நிற்கிறது. விவசாய பணிகள் இல்லாத காலங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அவர்கள் வாழ்வில் ஔியேற்றும் திட்டமாக இருந்து வருகிறது.
ஆனால் புதுச்சேரியில் இதன் நிலை என்ன என்று பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு சராசரியாக 14 நாட்களே வேலை அளிக்கப்பட்டு உள்ளது. சில கிராமங்களில் வேலையே நடக்கவில்லை என்பது வேறு. காரணம் நிதி பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 75 ஆயிரத்து 406 நூறு நாள் வேலை அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 100 நாட்கள் வேலை என்றால் 75 லட்சத்து 40 ஆயிரம் வேலை நாட்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும் அவர்களுக்கு வேலைதர வேண்டுமானால் ரூ. 200 கோடிக்கு மேல் நிதி தேவைப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு வெறும் ரூ. 12 கோடியை மட்டுமே அளிக்கிறது. அதிக நிதி பெற்றுவர புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுக்கு 8 லட்சம் வேலை நாட்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 67 லட்சம் வேலை நாட்கள் நடைமுறைப் படுத்தவில்லை. இது எப்படி போதுமானதாக இருக்கும். ஒரு நாள் கூலியாக ரூ. 283. ஆனால் நீங்கள் கொடுப்பது ரூ. 210 மட்டுமே. இதிலேயும் மக்களை வஞ்சிக்கிறீர்கள்.
100 நாள் வேலை கொடுத்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ. 28 ஆயிரம் வருமானம் ஈட்ட முடியும். கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு சட்டப்பூர்வமாக சேர வேண்டிய ரூ. 25 ஆயிரம் அரசு ஆண்டுதோறும் மறுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசு நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தற்கு கடந்த ஆண்டைவிட சுமார் 30 சாதவீதம் குறைவாக ரூ. 60 ஆயிரம் கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. நிதி ஒதுக்கீடு அதிகரிப்பின்படி ரூ. 89 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அதைச் செய்யவில்லை. இதனால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் வேலை மட்டுமே வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
––2––
பல மாநிலங்களில் இத்திட்டத்தை 100–லிருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும், ஊரக திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுக்கின்றன.
ஒருபுறம் ஒன்றிய அரசு நிதியை குறைத்தும், பல்வேறு புதிய விதிமுறைகளை புகுத்தியும் இத்திட்டத்தை மெல்ல, மெல்ல நீர்த்துப்போக செய்கிறது என்றால், புதுச்சேரி அரசோ இந்த திட்டத்தை முற்றிலுமாக முடக்கி உள்ளது.
ஒரு அமைப்பிற்கு ஆண்டுக்கு 3 லட்சம் வேலை கூடுதலாக கேட்டிருப்பதாக தகவல் தரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 65 லட்சம் நாட்கள் பாக்கி இருக்கும்போது, இது என்ன 3 லட்சம் வேலை நாள் என்று புரியவில்லை. அதேபோல், 100 நாள் வேலைக்கான லேபர் பட்ஜெட் கிராம பஞ்சாயத்துக்கள் தோறும் தயார் செய்து கொடுக்காமல் எப்படி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
DRDA மூலம் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தில் 9 தலைப்புகளில் 200–க்கும் மேற்பட்ட பணிகளை செய்யலாம். குறிப்பாக சமுதாயக் கூடம் அமைத்தல், மரம் நடுதல், நிலம் பராமரித்தல், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் வாய்க்கால், சாலை, குளம் பணிகளை மட்டும் செய்ய முடிகிறது. இதன் காரணமாகத்தான் ஆண்டுக்கு தேவையான 75 லட்சம் வேலை நாட்களுக்கான டிமாண்ட் வைக்க முடியவில்லை.
வட்டார வளர்ச்சி அலுவலகம் வேலை செய்ய தயாராக இருந்தும் DRDA–வின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அவர்களால் முழுமையாக பணி செய்ய முடியவில்லை. துறை அமைச்சருக்கு சரியான புரிதல் இல்லை என்பது முக்கிய காரணம். ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசிடம் நிதி கோருங்கள் என்றால் எங்களை வழி சொல்ல சொல்கிறார். அதற்கு உதாரணம் DRDA திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ரிஷிதா குப்தா அவர்கள் அங்குள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பின்மை மற்றும் துறையில் நடக்கும் பல்வேறு குளறுபடிகளால் தானாகவே மாறுதல் பெற்று சென்றுள்ளார்.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி வந்த பிறகு இத்திட்டத்தின் மீது போதிய ஆதரவு காட்டவில்லை. படிப்படியாக இத்திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்திவிடுமோ என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றும் நிலை உள்ளது.
காரணம் 100 நாள் வேலை திட்டத்தின் பணியாளர்கள் தங்கள் வருகையை இனி மொபைல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டிருக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் எப்படி ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்த முடியும். மேலும் பல கிராமங்களில் இன்னும் இன்டர்நெட் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. இப்படி தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டில் குழப்பம் ஏற்பட்டால் ஊதிய இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும் இதுபோன்ற அறிவிப்புகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மீது ஒன்றிய அரசு நடத்தும் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றும், மாநில அரசு தமது பங்களிப்பை உரிய முறையில் ஒதுக்கீடு செய்தும் நடப்பு நிதியாண்டில் 100 சதவீதம் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதை அவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக