புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்திற்கு நல்லது நடக்கும், விமோசனம் பிறக்கும் என்ற நம்பிக்கை, கனவுகளோடு ஆட்சி எனும் அரிய பொக்கிஷத்தை மக்கள் வழங்கினார்கள். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி, குழந்தையின் கையில் கிடைத்த விளையாட்டு பொம்மையாக, புதுச்சேரி மக்களை ஆட்டுவிக்கிறார். நல்வாழ்வு பிறக்கும் என நம்பியிருந்த புதுச்சேரி மக்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி, விரக்தி, வேதனையின் எல்லைக்கு தள்ளியுள்ளார்.
சுத்தமான குடிநீருக்கு மட்டுமல்ல, பசியில் அழும் பச்சிளம் குழந்தைகளின் பாலுக்குக்கூட புதுச்சேரியில் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் அடிப்படை தேவைகள், நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், மாநில அந்தஸ்து இல்லை, மன உளைச்சலில் உள்ளேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அதேநேரத்தில் மறுபுறம் கவர்ச்சி நடன பாருக்கு அனுமதி, மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குகிறார். சாராய முதலாளிகளுக்காக அனைத்து சலுகைகளையும் சட்டத்தை வளைத்து செய்து தருகிறார்.
முதலமைச்சர் கையில் மாநில அந்தஸ்து என்ற அதிகாரம் இல்லாமலேயே தாராளமாக மது ஆறு ஓடுகிறது. மாநில அந்தஸ்து என்ற முழு அதிகாரமும் முதலமைச்சருக்கு கிடைத்தால் புதுச்சேரி மாநிலமே மது கடலாக மாறிவிடும் என மக்கள் அஞ்சுகின்றனர். மாநில அந்தஸ்து விவகாத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கபடநாடகம் ஆடுவதை புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். இதனால்தான் காரைக்கால் பிராந்திய மக்கள் தங்களை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பல ஆண்டாக நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பிராந்திய மக்கள் மனதிலும் நீரு பூத்த நெருப்பாக மனதில் எரிந்துகொண்டிருந்த கனல் இப்போது வெப்பத்தை கக்க தொடங்கியுள்ளது. பாகூர் கொம்யூனை சேர்ந்த மூ.புதுக்குப்பத்தை சேர்ந்த மீனவ கிராம மக்கள், புதுச்சேரி மாநிலமே வேண்டாம். காசு கொடுத்து குடிநீர் வாங்குகிறோம், 3 முறை டெண்டர் வைத்தும் சாலை அமைக்கவில்லை. ஜனநாயகத்தின் வெளிப்பாடான கிராம சபை கூட்டத்தில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் கிராமத்தை புதுச்சேரி ஆட்சிப்பரப்பிலிருந்து நீக்கி, தமிழகத்தோடு இணைத்து விடுங்கள் என மனு அளித்துள்ளனர்.
இதே எண்ணத்தோடுதான் புதுச்சேரியின் பல்வேறு கிராம மக்களும், மீனவ கிராம பஞ்சாயத்தினரும் உள்ளனர். முதலமைச்சரின் ஆட்சியால் புதுச்சேரி மக்களிடையே ஏற்பட்டுள்ள, இந்த எண்ணம் வரலாற்று பிழையாக மாறிவிடும். இந்திய வரைபடத்தில் இருந்து பாரம்பரியமும், பன்முக கலாச்சாரமும் கொண்ட புதுச்சேரி அழிந்துவிடும். அதிகார போதையால், புதுச்சேரி மாநில மக்களின் உரிமைகளை பலி கொடுத்துவிட வேண்டாம் என முதலமைச்சருக்கு அதிமுக சார்பில் எச்சரிக்கை செய்கிறோம்.
புதுச்சேரி மக்களிடையே எரியும் கனல் பற்றி எரிந்து புரட்சியாக வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே முதலமைச்சர் தனது இயலாமை, மூப்பு ஆகியவற்றை ஒப்புக்கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்க வேண்டும். ஆட்சியை விடுத்து ஆன்மிக பாதைக்கு திரும்புவதுடன், இளைஞர்களின் ஆட்சிக்கு வழிகாட்டும் நல்ல ஆசானாக திகழ்வதே சாலச்சிறந்தது என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அறிவுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக