புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அருமை அண்ணன் அன்பழகன் அவர்களுக்கு,
எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, கண்ணின் இமைபோல தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமியை பாதுகாத்து பிரகாசமாக ஜொலிக்க வைக்கிறீர்களா?
இன்று தாங்கள் வைர கிரீடம் சூட்டும் முதலமைச்சர் ரங்கசாமி 2011ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தயவால் வெற்றி பெற்ற பின், வாக்களித்த மையின் தடம் மறையும் முன்னரே புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்து, தனித்து ஆட்சி அமைத்ததை மறந்து விட்டீர்களா?
நீண்டகாலத்திற்கு பிறகு புதுச்சேரியில் அதிமுகவின் அமைச்சராகலாம் என தங்களுக்கு இருந்த கனவு குழிதோண்டி புதைக்கப்பட்டதையும் மறந்து விட்டீர்களா?
சரி, பழங்கதையை விடுங்கள். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு கூட்டணி கட்சி தலைவரான, தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு.ரங்கசாமி வரவில்லை என்பதையும் மறந்துவிட்டீர்களா?
அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் என்ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணியாற்றாமல், நம்மை வீழ்த்த பணியாற்றியதை மறந்து விட்டீர்களா?
நம் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வமான புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிமடுத்தும் கேட்காமல் முதலமைச்சர் த
ரங்கசாமி அலட்சியம் காட்டுவதை மறந்துவிட்டீர்களா?
கூட்டணி தர்மத்தை என்றும் மீறாத மாண்புமிகு.முதலமைச்சர், கூட்டணி ஆட்சி ஓராண்டு நிறைவு செய்தபோது நன்றி தெரிவித்து வெளியிட்ட விளம்பரத்தில், இதய தெய்வங்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படங்களையோ, மாண்புமிகு தமிழக எதிர்கட்சித்தலைவர், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் அன்புக்குரிய அண்ணன் திரு.எடப்பாடியார் படத்தையோ, குறைந்தபட்சம் தங்களின் படத்தைக்கூட இடம்பெற செய்யாத தர்மத்தை மறந்துவிட்டீர்களா?
எனவே, சட்டமன்ற தேர்தல் முடிந்து 20 மாதங்களை கடந்த நிலையிலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழக எதிர்கட்சித்தலைவர், அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்களை இன்றுவரை சந்தித்து குறைந்தபட்சம் நன்றியைக்கூட தெரிவிக்காத முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்களுக்கு ஆதரவாக நாள்தோறும் அறிக்கை விடுவதும், பேட்டிகள் அளிப்பதும், அன்பிற்கும், பாசத்திற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அண்ணன் திரு.அன்பழகன் அவர்களின் சொந்த கருத்தே.
புதுச்சேரி மாநில மக்களின் அக்கறையோடு செயல்பட்டு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழக எதிர்கட்சித்தலைவர், அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் வெளியிடும் கருத்துக்களே புதுச்சேரி அதிமுகவின் கருத்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக