புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனையை வலியுறுத்தி கழகத்தினுடைய கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் அனுமதியோடு மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் ஆளுமைக்கு கீழ் அடிமைப்பட்டு இருக்கின்றது.பிற மாநிலம் போன்று புதுச்சேரி மாநிலத்தில் எந்த அதிகாரமும் இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பல் இல்லாத பாம்பு போன்று செயல்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்கள் போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் இல்லாததால் மாநிலத்தினுடைய வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எந்த முதலமைச்சராக இருந்தாலும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலையே தொடர்கிறது.
இது போன்ற சூழ்நிலையில் நம் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். அதற்காக இன்று நடைபெரும் பந்த் போராட்டத்தை ஆளும் அரசு திராவிட முன்னேற்றக் கழக துணையோடு அதிமுகவினரை காவல்துறையை வைத்து கைது செய்துள்ளனர்.
விடியற்காலை 5 மணி அளவில் எஸ் டி எஃப் ஸ்பெஷல் போலீஸ் போர்ஸ் 30க்கும் மேற்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி கைது செய்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சில திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டிஜிபிஐ சந்தித்து நேற்றைய தினம் புகார் அளித்ததின் அடிப்படையில் என்னை இன்று கைது செய்துள்ளனர்.25 ஆண்டு கால புதுச்சேரி மாநில அரசியல் வரலாற்றில் பந்த் போராட்டத்திற்காக முன்னெச்சரிக்கையாக யாரும் இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் கைது செய்யப்பட்டதில்லை. இந்நிலையில் திமுகவின் புகாரை அடுத்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நடப்பது என் ஆர் காங்கிரஸ் பிஜேபி அரசா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி அரசா என்கின்ற சந்தேகம் எழுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏவல் துறையாக புதுச்சேரி காவல்துறை அதிமுகவினரை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
நடைபெறும் இந்த பந்த் போராட்டத்தின் மூலம் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநில அந்தஸ்து சம்பந்தமான பிரச்சனையில் உண்மை முகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வெத்து அரசியலுக்காக மாநில அந்தஸ்து பற்றி பேசுகின்ற திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று எங்களது பந்த் போராட்டத்தை எதிர்த்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று அரசியல் அனாதையாக உள்ள ஓபிஎஸ் அணியினர் பந்த் இல்லை என்று விளம்பரம் வேறு கொடுத்திருந்தனர். பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்து போராட்டத்தை முறியடிப்போம் என்று சபதம் செய்தனர். பிஜேபி ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பந்த் நடத்த விட மாட்டோம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உண்மையில் கடந்த மூன்று தினங்களாக எங்களுக்கு எதிராக பேசியவர்கள் அனைவருமே எங்கள் பந்த்க்கு விளம்பரத்தை தேடி கொடுத்தனர்.
புதுச்சேரி மாநிலத்திற்கு சம்பந்தமே இல்லாத பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்தில் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரால் அறிவிக்கப்பட்ட பல பந்த் போராட்டத்தை புதுச்சேரியில் இங்கு திமுக வினர் நடத்தினர். அப்போது இயக்கப்பட்ட பல பேருந்துகளை உடைத்தனர்.ஆனால் எந்த திமுகவினரையும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அதிமுக வினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் பிஜேபியுடன் திராவிட முன்னேற்ற கழகம் மறைமுக தொடர்பை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்கும் வேளையில் ஈடுபடும் திமுகவிற்கு பிஜேபி துணை நிற்பதாக தெரிகிறது.
இவ்வளவு எதிர்ப்பு மீறி எங்களது அமைதியான பந்த் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஸ் ஓட்டுநர்கள் அதன் உரிமையாளர்கள் வர்த்தக வியாபார பெருமக்கள் சிறிய நடுத்தர கடை உரிமையாளர்கள், ஆட்டோ டெம்போ ஓட்டுநர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் ஓட்டல் உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநில உரிமையை மீட்டெடுக்கும் இந்த பிரச்சனையில் இதோடு நாங்கள் விட்டு விட மாட்டோம் மீண்டும் மக்களை திரட்டி தலைமை கழகத்தின் அனுமதி பெற்று தொடர் போராட்டங்களை அதிமுக நடத்தும். மத்திய அரசிடம் இருந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில உரிமையை பெற்றுத்தர அதிமுக தொடர்ந்து போராடும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக