புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே ஆட்சியாளர்கள் செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாக உறுதியளித்து மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது. சிலரின் சுயலாப நோக்கத்தாலும், லஞ்ச லாவண்யத்தாலும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொண்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஒரு இடம்கூட புதுச்சேரி அரசின் ஒதுக்கீடாக பெறாதது பெரும் வெட்கக்கேடான விஷயம்.
இந்நிலையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் பிச்சையிடுவதுபோல மருத்துவக்கல்லூரி இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டும் குறைவான இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்கியுள்ளனர். மக்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசும், ஆட்சியாளர்களும் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவர்கள் தரும் இடங்களை பெறுவதை பெரும் ஆனந்தமாக கருதி செயல்படுகின்றனர். மாணவர்களின் நலனுக்காக காமராஜர் போன்ற பல தலைவர்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரும் போராட்டத்தை சந்தித்து நற்பெயர் பெற்றுள்ளனர். அவர்களின் பெயரை பயன்படுத்தி புதுச்சேரியில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாணவ சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவது அநீதி, அக்கிரமத்தின் உச்சம்.
புதுச்சேரியில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் ஒன்றையும் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற உச்சகட்ட அதிகாரம் படைத்தவர் அனுமதியளித்து தனியார் மருத்துவ கல்லூரி மீதான தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். இதேநிலை நீடித்தால் வரும்காலத்தில் புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லூரியை தவிர வேறு எந்த கல்லூரியிலும் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள் கிடைக்காது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவக்கல்வி என்ற கனவு கானல்நீராகவே மாறிவிடும்.
வார்த்தை ஜாலங்களாலும், வாழ்க்கை நாடகத்தாலும் மக்களையும், மாணவர்களையும் நீண்டகாலம் ஏமாற்றிவிட முடியாது. புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் வஞ்சிக்கப்பட்டால் அதை அதிமுக அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது. புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக அவர்களோடு வீதியில் இறங்கி போராடவும் தயங்காது. ஆட்சியாளர்கள் தங்கள் தவறை உணர்ந்து, புதுச்சேரி மாநில மாணவர்களின் நலன் கருதி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக