சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியில் கூட இப்படி ஒரு திட்டத்தை வகுக்க முடியாது..! புதுச்சேரி அரசுக்கு அதிமுக கண்டனம்..!
புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்தில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என அதிமேதாவித்தனமான அறிவிப்பை அரசின் சார்பு செயலர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் முழு நோக்கமும் இரவு நேரத்தில் மதுபான கடைகளை திறப்பது ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டது. அரசியல் ஆதாயத்திற்காகவும், சாராய வியாபாரிகளை திருப்திப்படுத்தவும், மக்களைப்பற்றிய சிந்தனை துளியும் இன்றி சுயநல லாப நோக்கோடும்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுச்சேரி மக்களின் உயிர் பிரச்சினைக்காக அரசு மருத்துவமனைகள் கூட 24 மணி நேரமும் செயல்படுவது இல்லை. இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் அவசர சிகிச்சை அரைநாளோடு மூடப்படும் அவலம் நிலவுகிறது. இரவில் விபத்தில் சிக்குபவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அத்தியாவசிய தேவையான மருந்துகள்கூட இரவில் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய எந்த முயற்சியும் அரசிடம் இல்லை.
புதுச்சேரியில் 24 மணி நேரமும் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்குதான் சீர்கெடும். ஏற்கனவே ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவலர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, 24 மணி நேரமும் பாதுகாப்பு, போக்குவரத்து பணியில் யார் ஈடுபடுவார்? ஏற்கனவே வார இறுதி நாட்களில் வெளிமாநில இளைஞர்கள் வருகையால், புதுச்சேரி கலாச்சார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. 24 மணி நேர அனுமதியளித்தால் புதுச்சேரி கலாச்சாரம் முற்றிலும் சீர்குலையும். போதைப்பொருள் நடமாட்டம், விபச்சாரம், பாலியல் வன்கொடுமைகள், அண்டைமாநில சமூகவிரோதிகளின் கூடாரமாக புதுச்சேரி மாறும்.
ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள பிரபல ஜவுளி கடைகள், பன்னாட்டு நிறுவனங்களில் சொற்ப சம்பளத்துக்கு புதுச்சேரி மாநில இளைஞர்களும், இளம்பெண்களும் கொத்தடிமைகளாக வேலைபார்க்கின்றனர். அரசின் இந்த அறிவிப்பால் புதுச்சேரி இளைஞர்கள் உழைப்பு மேலும் சுரண்டப்படும். கட்டாயமாக தொடர் பணியில் ஈடுபட வற்புறுத்தப்படுவர். இதனால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படும். இளம்பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும்.
சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சியில்கூட இப்படியொரு திட்டத்தை வகுக்க யாருக்கும் தைரியம் வராது. இளம்பெண்களை விதவைகளாக மாற்றும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கிய அரசு, அந்த மது வகைகளை விற்பனை செய்ய இத்திட்டத்தை நயவஞ்சகமாக வகுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சார சீரழிவை அதிமுகஒருபோதும் ஏற்காது. புதுச்சேரி அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வாபஸ்பெற வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக