ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலின் படி ஆளுநர், முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்,
புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி 16.03.1989-ஆம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட்டாக மாற்றம் செய்யப்பட்டு, சந்தை விலையை விட குறைவான விலையில் மளிகை, ஜவுளி மற்றும் மின்சார சாதனங்கள் ஆகிய பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துகொள்ளும் வகையில் மாத கடனில் பொருட்களை விற்பனை செய்து லாபத்தோடு சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆட்சியாளர்களின் தொடர் குறுக்கீட்டால் அமுதசுரபி நிறுவனத்தில் தேவைக்கு அதிகமாக பணியாட்களை நியமித்தது, தனியார் கட்டிடங்களில் மாத வாடகைக்கு தேவையற்ற இடங்களில் கடைகளை திறந்து செயல்படுத்தியது போன்ற காரணங்களால்தான் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, ஊழியர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எந்தவித பொருட்களும் இன்றி பெயரளவில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அமைச்சரவை அலுவலகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பொருட்கள் வாங்கிய வகையில் லட்சக்கணக்கில் நிலுவைத் தொகை வைத்திருப்பதை அறிந்து, அமைச்சரவை அலுவலகம், அமுதசுரபிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஆகிய விபரங்களை RTI மூலம் தகவல்களாக கேட்டதற்கு. மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல் தராத காரணத்தால், முதல் மேல்முறையீடு செய்தபின்பு அளித்த தகவலின்படி, அமுதசுரபிக்கு அமைச்சரவை அலுவலகம் 82.31லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
மேற்கூறியுள்ள காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி ஊழியர்களுக்கே ஊதியம் போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, பெயரளவில் செயல்பட்டு வரும் அமுதசுரபி நிறுவனத்திற்கு, செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 82.31 லட்ச ரூபாயை அமைச்சரவை அலுவலகம் செலுத்தாது ஏன்?
இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகள் மறிறும் ஆட்சியாளர்களின் குறுக்கீட்டால்தான் நல்லமுறையில் செயல்பட்டு வந்த வானவில், பாரதி கூட்டுறவு அங்காடி போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. எனவே அமைச்சரவை அலுவலகம் செலுத்த வேண்டிய லட்சக்கணக்கான நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் எனவும், பொன்விழா கண்ட அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தை மேம்படுத்தவும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக