காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெறப்பட்ட தகவலின் படி ஆளுநர், பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்,
புதுச்சேரியில் அனைத்து உபயோகத்திற்கும் குடிநீரையே உபயோகப்படுத்தப் படுவதால் தினசரி நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் செயல்பாட்டில் இருந்த ஆழ்துளை கிணறுகள் உப்பு கலந்து தரமற்ற குடிநீராக மாறிவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், இதுகுறித்து பொதுப்பணித்துறையில் RTI மூலம் தகவல்களாக கேட்டதற்கு அவர்கள்;
புதுச்சேரி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய 361 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 25 ஆழ்துளை குழாய் கிணறுகள் உப்புத்தன்மை உள்ள நீராக மாறிவிட்டதாகவும், தினசரி குடிநீர் விநியோகத்திற்கு 109.1 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் எடுப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
இதன்படி பார்க்கும்பட்சத்தில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் ஒரு நபருக்கு தினசரி சுமார் 150 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவது தெரிகிறது.
சராசரியாக ஒரு நபருக்கு குடிக்க, சமைக்க பயன்படுத்தப்படும் நீர் 10 முதல் 20 லிட்டர் வரைதான். இந்நிலையில் மீதமுள்ள 130 லிட்டர் குடிநீர் குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்கள், வாகனங்கள் கழுவ, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற உபயோகத்திற்குத்தான் இந்த நீரை பயன்படுத்துகின்றனர். இதனால் தினசரி குடிநீர் பெருமளவு வீணடிக்கப்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி பொதுப்பணித்துறையினர் மூலம் 2015-ஆம் ஆண்டின் தகவலின்படி 30-க்கும் மேற்பட்ட இடங்களில் Water Purification Plant அமைத்து தினசரி 1.60 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் ஒரு லிட்டர் சுத்திகரிக்க 1.3லிட்டர் வீதம் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது 300 அடிக்கும் மேல் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்நிலையில் குடிக்க, சமைக்க மட்டுமின்றி அனைத்து பயன்பாட்டிற்கும் குடிநீரையே பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்படும்.
தற்போது விநியோகம் செய்யும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தாமல் ஏற்கனவே 361 ஆழ்துளை கிணறுகள் இருக்கும்போது, குடிநீர் பற்றாக்குறை என காரணம் கூறி மேன்மேலும் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து புதுச்சேரியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.
தினசரி காலை, மதியம் இரவு என 10 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும். இதுபோல் குடிப்பதற்கு உகந்த நீர், பிற உபயோகத்திற்கான நீர் என வெவ்வேறு நேரங்களில் மேலை நாடுகளில் உள்ளது போல் இரட்டை குடிநீர் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.
இதனால் தேவையின்றி குடிநீர் வீணாக்கப்படுவது, தவிர்க்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். குடிநீர் சிக்கனம், வீடு, வர்த்தக நிறுவனம், அலுவலகங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நடைமுறைப் படுத்தும் பட்சத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் .
எனவே இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக