புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும் புதுச்சேரி மாநில மக்கள் பிரதிதிகளுக்கு உரிய அங்கீகாரம், அதிகாரம் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறிய துறை போல புதுச்சேரி மாநிலம் செயல்பட வேண்டிய துர்பாக்கிய நிலை நிலவுகிறது. இதனால்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேர்தலுக்கு தேர்தல், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று கூறி மக்களின் ஆசைக்கு தீ வைத்து குளிர்காய்வதும் வாடிக்கையாகிப்போனது. கடந்த தேர்தலின்போது, மாநில அந்தஸ்தை பெற வலியுறுத்தி தேர்தலையே புறக்கணிப்போம் என இப்போதைய முதலமைச்சர் சூளுரைத்தார். ஆனால் தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதலமைச்சரின் சூளுரை என்ன ஆனது? ஆட்சி அமைந்து ஓராண்டை கடந்தும் டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில அந்தஸ்து பெற சிறு முயற்சியைக்கூட முதலமைச்சர் மேற்கொள்ளாதது புதுச்சேரி மாநில மக்களை பெரும் வேதனையிலும், விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது.
இத்தகைய சூழலில் *மேதகு துணைநிலை ஆளுநர் தலைமையில் நடந்த சீராய்வு கூட்டத்தில், புதுச்சேரி மாநில அரசின் நில உரிமை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் முன்னிலையில், புதுச்சேரி மாநில அரசின் நில உரிமைகள் அனைத்தையும் துணை நிலை ஆளுநரிடம் வழங்குவது என முடிவு செய்துள்ளனர். இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.* இது மாநில அந்தஸ்து பெறும் உரிமையை முழுமையாக சீர்குலைக்கும். நில உரிமையை தொடர்ந்து உள்துறை, பொதுப்பணி, உள்ளாட்சி, நிதி நிர்வாகம் என அனைத்து பொறுப்புகளையும் துணை நிலை ஆளுநரே ஏற்க வேண்டிய நிலை உருவாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் துணைநிலை ஆளுநரின் கைப்பாவையாக மாற்றப்படுவர். விரைவில் சட்டமன்றம் இல்லாத புதுச்சேரியாக மாற்றப்பட்டு, ஒரு நிர்வாகியின் ஆளுகைக்கு கீழ் புதுச்சேரி மாநிலம் சென்றுவிடும்.
துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் சகோதாரன், சகோதரி என ஒருவர் மீது ஒருவர் அன்பை பொழிவதுபோல காட்டிக்கொண்டு, மாநில மக்களை வஞ்சித்து வருகின்றனர். புதுச்சேரி மாநில மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற, மாநில அந்தஸ்து பெற, மத்திய கூட்டணி அரசிடம் அரசியல் அழுத்தம் கொடுத்தோ? நீதிமன்றங்களை நாடி சட்ட ரீதியிலோ மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அதைவிடுத்து தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல துணைநிலை ஆளுநர் கூறும் அனைத்தையும் முதலமைச்சர் ஏற்றுக்கொள்வது மாநில வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் உகந்தது அல்ல. இது புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் சுமார் 15 லட்சம் மக்களுக்கும் துரோகம் விளைவிப்பதாக அமையும்.
நில உரிமை குறித்து பதிலளித்துள்ள துணை நிலை ஆளுநர், பெஸ்ட் மற்றும் பாஸ்ட் புதுச்சேரியாக மாற்ற சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மது ஆறு ஓட, புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பதுதான் பெஸ்ட் புதுச்சேரியா? இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் சூதாட்ட கப்பலை அனுமதிக்க முயற்சிப்பதுதான் பெஸ்ட் புதுச்சேரியா? மதுபான பார்களை 24 மணி நேரமும் திறப்பதுதான் பெஸ்ட் புதுச்சேரியா?
புதுச்சேரியின் நில உரிமையை துணை நிலை ஆளுநர் வசம் ஒப்படைத்தால் அரசு, அரசு சார்பு நிறுவனங்களின் வசம் உள்ள சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள 1,500 ஏக்கர் நிலங்கள் அவரின் கட்டுப்பாட்டுக்கு செல்ல நேரிடும். பல மாநிலங்களில் விரட்டியடிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டைர்லைட் போன்ற தொழிற்சாலைகளுக்கு, சட்டமன்றம், அமைச்சரவை ஒப்புதல் இன்றி நிலம் ஒதுக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். வளம், வளர்ச்சி, மக்கள் நலன் சீர்குலைக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலமே சுடுகாடாக மாறிவிடும். எனவே புதுச்சேரியின் நில உரிமையை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக