புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். நகரத்தையொட்டி வளர்ந்து வரும் பகுதியான முத்தியால்பேட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டுவர வேண்டும் என சட்டசபையில் நான் குரல் கொடுத்தேன். இதன் விளைவாக ரூ.120 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 2018ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்டது. திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஸமார்ட் சிட்டி சட்டதிட்டத்தின்படியும், ஏழை தாய்மார்களின் கோரிக்கையை ஏற்றும் முத்தியால்பேட்டை தொகுதியில் காட்டாமணிக்குப்பம் சாராயக்கடை, புளியமரத்து சாராயக்கடைஆகிய இடங்களில் இருந்த சாராயக்கடைகள் பலகட்ட போராட்டத்துக்கு பின் அகற்றப்பட்டது. இதனால் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏழை, நடுத்தர குடும்ப தாய்மார்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் முத்தியால்பேட்டையில் சாராயக்கடைகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய மக்கள் பிரதிநிதி இதன் பின்னணியில் செயல்பட்டு சாராயக்கடைகளை கொண்டுவர முடிவு செய்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வாழும் ஏழை தாய்மார்கள் சாராயக்கடைகள் அகற்றத்தால் கண்ணீரின்றி வாழ்ந்து வருகின்றனர். சுய லாபத்துக்காக சாராயக்கடைகளை திறந்து ஏழை பெண்களை விதவைகளாக்குவதை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
முத்தியால்பேட்டை தொகுதியில் மீண்டும் சாராயக்கடை அமைக்கும் முடிவை புதுச்சேரி அரசு, கலால்துறை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்சித்தலைமையின் அனுமதி பெற்று, முத்தியால்பேட்டை தொகுதி தாய்மார்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக