முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் மின் கட்டண ரசீது வழங்க காங்கிரஸ் ஊடகப்பிரிவு வலியுறுத்தல்

புதுச்சேரி காங்கிரஸ் சமூக ஊடக பிரிவு தலைவர் கோர்க்காடு அசோக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரியில் மின் கட்டணம் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் கட்டண ரசீதில் பல தலைப்புகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அது அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் எது, எதற்கு கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்று கூட மின் நுகர்வோர்களுக்கு தெரிவதில்லை. எனவே முதலில் நுகர்வோர்களுக்கு எது, எதற்கு கட்டணம் வசூலிக்கின்றோம் என்பதை தெரிவிக்கும் வகையில் தமிழில் மின் கட்டண ரசீது வழங்க வேண்டும். 
அதுபோல் மின் கட்டண உயர்வுக்கு அரசு த்துறைகள் மற்றும் பெரிய, பெரிய தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மின் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 
பழைய நிலுவை கட்டணங்களை வசூலிக்க அரசு சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அந்த முகாமில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் பெரும்பாலான நிறுவனங்கள், தனி நபர்கள் மின் கட்டண பாக்கியை விரைந்து செலுத்த முன் வருவார்கள். 
வீடு கட்டுவதற்கு கடகால் போடுவதற்கே மானியம் வழங்கும் முறையை அரசு கொண்டுவர உள்ளது. இது வரவேற்க கூடியதுதான். அதுபோல் வீட்டு மாடிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய சோலார் சிஸ்டம் அமைக்கவும் மானியத்தை முன்கூட்டிய வழங்கும் முறையை அரசு கொண்டுவர வேண்டும். அல்லது விருப்பப்படுபவர்களின் மாடிகளில் மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் பேனல்களை நிறுவி அதில் இருந்து வரும் மின்சாரத்திற்கான கட்டணத்தில் இருந்து மானியம் போக அதை நிறுவியதற்கான தொகை வரும் வரை வசூலித்துக் கொள்ளும் முறையையும் கொண்டுவரலாம். இதுபோன்ற செயல்கள் மூலம் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்படாத சூழலை உருவாக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்